டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர்.

ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் தங்களது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மீது அரசின் அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. அநீதிக்கு எதிராக எழும் குரல்களை அடக்குமுறையால் ஒருபோதும் மௌனமாக்க முடியாது.

தலைநகர் டெல்லியில் உருவாகியுள்ள இளைஞர் எழுச்சியை அடக்குவதற்காக கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசுதல், இணைய சேவையை துண்டித்தல், மெட்ரோ நிலையங்களை மூடுதல் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கல்விக்கும் நீதிக்கும் மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றி பெறட்டும். மாணவர்களின் உயிரையும் எதிர்காலத்தையும் தொடர்ந்து பறித்து வரும் நீட் தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்” என்று  வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version