நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள முடிவுக்கு, பாஜக மூத்த தலைவர்கள் எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, இன்று (ஜூலை 25) தனது பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதுபற்றி பாஜக மூத்ததலைவர்கள் சமூக வலைதளத்தில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் தெரிவித்துள்ள எக்ஸ் பதிவில், தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தியதில் தர்மேந்திர பிரதானின் பங்கு மிக முக்கியமானது. பொது நலனைக் கருதி அவர் எடுத்துள்ள இந்த ராஜினாமா முடிவு, பொது வாழ்வில் அவரது மிக உயர்ந்த நேர்மையையும் சுயநலமற்ற சேவையையும் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ள எக்ஸ் பதிவில், உண்மையான தலைமைத்துவம் என்பது பல தசாப்த கால சேவையால் அளவிடப்படுகிறது. தர்மேந்திர பிரதானின் பயணம் மாணவர்கள் நலனிலும் பொது வாழ்விலும் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்குச் சான்றாகும். கல்வித் துறையை வலுப்படுத்த அவர் ஆற்றிய சேவை மகத்தானது எனப் பதிவிட்டுள்ளார்.
பாஜக பொதுச்செயலாளர் வினோத் தவ்டே தெரிவித்துள்ள பதிவில், மாணவர் இயக்கத்தில் தொடங்கி கல்வி அமைச்சராக உயர்ந்த அவரது பயணம் ஒரு மைல்கல். ‘நாடே முதன்மை’ என்ற அவரது எண்ணம் 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடையத் தொடர்ந்து துணைநிற்கும்” என வாழ்த்தியுள்ளார்.
