புதுடெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த வாரம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் மாணவர்களை பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி தலைவர்களான ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் படங்களுடன் கரப்பான்பூச்சி உருவங்கள் இடம்பெற்ற விளம்பர பலகைகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. யஷ்பால் சுவர்ணா, நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாக மாறுவார் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், வெளிநாட்டு நிதி உதவியுடன் நாட்டில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஈடுபடுவதாகவும், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல என்றும் குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
