2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆப் 32’  சுற்றில் தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி, கனடா அணி தனது கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக ‘ரவுண்ட் ஆப் 16’ (அரையிறுதிக்கு முந்தைய சுற்று) தகுதி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஜூன் 29 இன்று லாஸ் ஏஞ்சலஸ் மைதானத்தில் நடந்த இந்த வரலாற்று ஆட்டத்தில் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ (Stephen Eustaquio) வெற்றிக்கான கோலை அடித்திருந்தாலும், ஒட்டுமொத்த கால்பந்து உலகின் பார்வையும் கேப்டன் அல்போன்சோ டேவிஸ் (Alphonso Davies) பக்கமே திரும்பியுள்ளது. 25 வயதே ஆன அல்போன்சோ டேவிஸின் வாழ்க்கை, உலகக் கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த எழுச்சிமிகு கதையாக மாறியுள்ளது.

கனடா அணியை வரலாற்றுப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ள அல்போன்சோ டேவிஸின் பின்னணி அத்தனை சாதாரணமானது அல்ல. இரண்டாவது லைபீரிய உள்நாட்டுப் போரின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க அவரது பெற்றோர் கானா நாட்டில் உள்ள ‘புடுபுராம்’ (Buduburam) அகதி முகாமில் தஞ்சமடைந்தனர். அங்கேயே பிறந்த டேவிஸ், சுத்தமான குடிநீருக்கும் ஒரு வேளை உணவுக்கும் கூட போராட வேண்டிய சூழலில் வளர்ந்தார்.

பின்னர், அவரது குடும்பத்தினருக்குக் கனடாவின் எட்மண்டன் நகரில் குடியேற அனுமதி கிடைத்தது. வறுமை சூழ்ந்த நிலையிலும் கால்பந்து விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. தனது 14-வது வயதில் குடும்பத்தைப் பிரிந்து, வான்கூவர் வைட்கேப்ஸ் கால்பந்து அகாடமியில் சேர்ந்தார். அங்கிருந்துதான் அவரது அசுர வளர்ச்சி தொடங்கியது.

2017-ல் கனடாவின் குடியுரிமையைப் பெற்ற அவர், தனது அபார வேகத்தால் ஐரோப்பிய கால்பந்து சாரணர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெர்மனியின் முன்னணி கிளப்பான பேயர்ன் முனிச் அணியில் இணைந்து, உலகின் மிகச்சிறந்த லெஃப்ட்-பேக்  வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார். இதன் மூலம் 7 புந்தெஸ்லிகா (Bundesliga) பட்டங்களையும், 2020-ல் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் (UEFA Champions League) கோப்பையையும் வென்று இந்தச் சாதனையைச் செய்த முதல் கனேடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம்  காரணமாக டேவிஸ் அவதிப்பட்டு வந்தார். இதனால் முதல் மூன்று லீக் போட்டிகளிலும் அவரால் விளையாட முடியாமல் போனது.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த வாழ்வா-சாவா போட்டியிலும் முதல் 73 நிமிடங்கள் பெஞ்ச்சில் அமர்ந்திருந்த கேப்டன் டேவிஸ், 74-வது நிமிடத்தில் களம் புகுந்தார்.

காயம் முழுமையாகக் குணமாகாத நிலையிலும், வலியை தாங்கிக்கொண்டு மைதானத்தில் அவர் காட்டிய அதிரடி வேகம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இடது விங் பகுதியில் அவர் ஆக்ரோஷமாக முன்னேறி தென்னாப்பிரிக்காவின் தடுப்பாட்டத்தைச் சிதறடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில்  யுஸ்டாக்கியோ கோல் அடிப்பதற்கு டேவிஸின் இந்த அதிரடி நகர்வுகளே முக்கியக் காரணமாக அமைந்தன.

இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் அதே வேளையில், அடுத்த சுற்றில் மொராக்கோ அல்லது நெதர்லாந்து போன்ற உலகின் வலுவான அணிகளில் ஒன்றை கனடா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கனடா அணி உலகக்கோப்பையில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றால், அகதியாகப் பிறந்து கனடாவின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து நிற்கும் கேப்டன் அல்போன்சோ டேவிஸ் முழு உடற்தகுதியுடன் விளையாடுவது மட்டுமே அந்த நாட்டின் 4 கோடி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version