விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், பதவியேற்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ஆட்சி அமைப்பதற்கான இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் மிகத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையிலும், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். பேச்சுவார்த்தையின் முடிவில், ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த விஜய்க்கு ஆளுநர் தரப்பில் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நான் நிச்சயம் நிரூபிப்பேன்” என ஆளுநரிடம் விஜய் உறுதியளித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிரடித் திருப்பத்திற்கு முக்கியக் காரணமாக, இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக-விற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தலைமையிலான கூட்டணியின் பலம் அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டி வலுவடைந்துள்ளது. ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, ரத்து செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழா குறித்த புதிய அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version