மேற்கு வங்க மாநிலம் பாருயிபூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஜூலை 8-ஆம் தேதி நடைபெறவுள்ள முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பேரணிக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தகவலை திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மற்றும் வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் சத்ர பரிஷத் (மாணவர் அமைப்பு) சார்பில் பாலிகஞ்ச் பாரி (Ballygunge Phari) முதல் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சாலை சந்திப்பு வரை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பேரணி நடைபெற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறினார்.
மேலும், “சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் கொல்கத்தாவில் பேரணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதற்கான கொள்கையை அரசு வெளியிடட்டும்; அதை நாங்கள் நீதிமன்றத்தில் சவால் செய்வோம். மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை திங்கள் முதல் வெள்ளி வரை இடைநிறுத்த முடியாது” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 ஆயிரம் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், காவல்துறையினர் தினமும் நடவடிக்கை எடுத்து கட்சித் தொண்டர்கள் வெளியே வர முடியாத சூழலை உருவாக்கி வருவதாகவும் கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டினார்.
“இந்த நிலைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் இவ்வாறு செயல்பட முடியாது” என்றும் அவர் கூறினார்.
