காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலின் உள் பிரகாரத்தில் பெண் நாட்டியக் கலைஞர் ஒருவர் நடனமாடி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக போற்றப்படும் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள், புதுமணத் தம்பதிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு வந்து வழிபடுவதோடு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தும் தற்போது அமெரிக்காவில் நாட்டியப் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு ஏகாம்பரநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், உள் பிரகாரத்தில், ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் இடம்பெற்ற ”அழகு மயில் ஆட… அபினயங்கள் கூட…” என்ற பாடல் படமாக்கப்பட்ட இடத்தில் அதே பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, கோவிலின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் இதுபோன்ற செயல்கள் நடைபெறக்கூடாது என்றும், வழிபாட்டு தலங்களில் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பல பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகம் அல்லது இந்து சமய அறநிலையத் துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியிடவில்லை.

