சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆதாரை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
சிபிஎஸ்இ கல்வி முறையில் மதிப்பெண்கள் அளிப்பதில் முரண்பாடுகள் உள்ளதாகவும், சிபிஎஸ்இ அமைப்பால் பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள், தங்களது கையெழுத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், இந்த முறையில் விடைத்தாள்கள் மாறியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மறுமதிப்பீட்டு தளத்தை மத்திய கல்வி அமைச்சகம் முடக்கி வைத்திருந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் செயல்பாட்டு வந்துள்ளது. இதையடுத்து, விடைத்தாள்கள் காணும் பணி, மறு மதிப்பீட்டுப் பணிகள் ஆகியவை இன்று (ஜூன் 2) தொடங்கி உள்ளன.
மாணவர்கள் இதனை மேற்கொள்ள சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதார் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத குழந்தைகள், அவர்களது பெற்றோர், உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் ஆதார் எண்ணை உள்ளிடும் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தங்கள் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த மறுமதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://cbse.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 6 வரை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலில் உள்ள சிக்கல்களைச் சரிபார்க்க, விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
குறிப்பிட்ட கேள்விகளுக்கு மறுமதிப்பீடு செய்ய, ஒரு கேள்விக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணங்களை UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் வழிகளில் மட்டுமே செலுத்த முடியும்.
