சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர் சதீஷ், மேயர் பிரியா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேறியதால், திமுக கவுன்சிலர்கள் ஒன்றாகத் திரண்டு தடுத்து நிறுத்தினர். இதனால் கூட்ட அரங்கம் மோதல் சூழலுக்கு உள்ளானது.

தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற முதல் மாதாந்திரக் கூட்டம் இன்று சென்னை மாநகராட்சியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அவர்களுக்கென தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், எந்த எம்எல்ஏவும் வராதது கவனத்தை ஈர்த்தது. கூட்டம் தொடங்கியதும் உரையாற்றிய மேயர் பிரியா, மின்வெட்டு பிரச்னையால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்படுவதாகவும், மாற்றம் வேண்டி வாக்களித்த மக்கள் இத்தகைய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மொத்தம் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் நீண்ட நேரம் பேசினர். பின்னர் அதிமுக கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அதிமுக கவுன்சிலர் சதீஷ், முன்பு பேசிய பலர் தங்கள் தலைவர்களைப் புகழ்வதிலேயே நேரத்தைச் செலவிட்டதாகவும், தான் அப்படி இல்லை என்றும், தன் வார்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திமுக கவுன்சிலர்கள், “உங்களுக்குத் தலைவரே இல்லையே” எனக் கிண்டல் செய்தனர்.

இந்த வார்த்தைகளால் கோபமடைந்த சதீஷ், திடீரென மேயர் இருக்கையை நோக்கி விரைந்தார். உடனே திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தடுத்து நின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து, உடல் மோதல் ஏற்படும் அபாயம் உருவானது. சூழல் மிகவும் பதற்றமான நிலையில், மேயர் பிரியா தலையிட்டு, “அனைவரும் அமைதியாக இருங்கள். கூட்டம் ஒழுங்காக நடைபெற வேண்டும்” என வலியுறுத்தி சமாதானப்படுத்தினார். பின்னர் கூட்டம் தொடர்ந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version