தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (மே 27) டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (மே 27) டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், மாலை 4.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதன்கிழமை காலை 10 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்படும் முதலமைச்சர் விஜய், பிற்பகல் அங்கு சென்றடைகிறார்.  டெல்லி தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் அவருக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது.

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். வியாழக்கிழமை சென்னை திரும்புவதற்கு முன்னதாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லி திரும்பிய பிறகு (மே 28), முதலமைச்சர் விஜய் அவரைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version