கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் 1000 கனஅடி நீர் திறந்து விடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும். மே 26ம் தேதி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தற்போது 744 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்வரத்தைக் கருத்தில் கொண்டு, வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அணையில் இருந்து 300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 1000 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், கிருஷ்ணகிரி முதல் சாத்தனூர் அணை வரையிலான தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கவோ அல்லது ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனித்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
