தமிழகத்தில் முக்கியப் பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாற்றங்களுக்கு இனி முதலமைச்சரின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகத் தலைமைச் செயலாளர் சாய்குமார் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அகில இந்திய பணி அதிகாரிகள் (IAS, IPS), கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DRO), காவல் கண்காணிப்பாளர்கள் (SP), கூடுதல் பதிவாளர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர்கள் ஆகியோரின் நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் இனி கட்டாயமாக முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-ன் விதி 35(4)-ன் கீழ் கடந்த 2022 முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும் மற்றும் கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7 ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசுத்துறையில் இருந்து மற்றொரு துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரின் ஒப்புதல் பெற்றால் போதும். அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அத்தகைய கோப்புகள் முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் நியமனங்களை இனி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்றும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version