போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ‘தேசவிரோதிகள்’ என முத்திரை குத்துவதை பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் நிறுத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று கலந்துரையாடினார். அப்போது, உண்மையான பிரச்சினைகளுக்காக போராட இளம் தலைமுறையினருக்கு உரிமை உள்ளது என்றும், அவர்களை தேசவிரோதிகள் என அழைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய அபிஜீத் திப்கே, “ஜென் Z இளைஞர்களை தேசவிரோதிகள் என அழைக்கக் கூடாது, போராடுவது அவர்களின் உரிமை, அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் உண்மையானவை என்று மோகன்பகவத் கூறுவதை வரவேற்கிறேன்” என்றார்.
மேலும், ஆளும் கட்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் மோகன் பகவத், மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பான அரசியல் அணுகுமுறையை மாற்ற பாஜக தலைமைக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“மாணவர்களை தேசவிரோதிகள் என்று அழைப்பது பாஜக உறுப்பினர்களே. தர்மேந்திர பிரதான் அவர்களை ‘பயங்கரவாதிகளின் பி-டீம்’ என்று கூறியுள்ளார். நிதின் நபின் அவர்களை ‘வைரஸ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இனி மோகன் பகவத்தின் கருத்தை அவர்கள் கேட்டு, அதன்படி செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.
சமூக வலைதளங்களில் தவறான மற்றும் போலியான வீடியோக்கள் பரப்பப்படுவது குறித்த மோகன் பகவத்தின் கவலைக்கும் அபிஜீத் திப்கே ஆதரவு தெரிவித்துள்ளார்.
“இதுகுறித்து நிச்சயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். போலி வீடியோக்களில் பெரும்பாலானவை ஐடி செல் மூலம் உருவாக்கப்படுவதை நாம் உன்னிப்பாக கவனித்தால் தெரியும். எனவே, மோகன் பகவத் கூறிய ஆலோசனையை ஏற்று, எந்த வீடியோக்கள் உண்மையானவை, எவை போலியானவை என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கும் CJP சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக அபிஜீத் திப்கே கூறினார்.
“இந்தப் போராட்டத்திற்கு எங்களது முழு ஆதரவு உள்ளது. எங்களது பிரதிநிதிகள் ஏற்கனவே அங்கு சென்றுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அவர்களது அனைத்து கோரிக்கைகளுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். நானும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். தற்போது சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன்” என்றார்.
மேலும், போராட்டத்தில் மாணவர்களே முன்னின்று செயல்பட வேண்டும் என்றும், அதற்கான அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் “நாங்கள் தொடர்ந்து ஒரு அழுத்தக் குழுவாக செயல்படுவோம். இந்த நாட்டின் மிகப்பெரிய தேவை அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறலைக் கேட்பதுதான். நாட்டின் குடிமக்கள் ஒன்றிணைந்து பொறுப்புக்கூறலைக் கேட்கும்போது, நிச்சயம் அதை பெற முடியும். அவர்கள் ராஜினாமாவைப் பெற்றதைப் போலவே” என்றும் தெரிவித்தார்.
