தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பர்களும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுமான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசு நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பது குறித்து திமுக எம்பி பி. வில்சன் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர்கள் அரசியல் மற்றும் பொது விவகார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் அதிகார வரம்பு மற்றும் ரகசியக் கூட்டங்களில் பங்கேற்பு அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அறைக்கு அருகில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ள இவர்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. அரசு ஊழியர்கள் அல்லாத இவர்கள் எந்த அதிகார அடிப்படையில் இத்தகைய கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள், அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை என்று வில்சன் தனது எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முதல்வர் ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்றுள்ள நிலையில், அரசு நிர்வாக விதிகள் (Rules of Business) மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறி இத்தகைய நபர்களை ஈடுபடுத்துவது தீவிர கவலையளிக்கிறது” என வில்சன் குறிப்பிட்டுள்ளார். ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக நிபுணராகவும், விஷ்ணு ரெட்டி தொழிலதிபராகவும் அறியப்படுகின்றனர். மே 22 அன்று இவர்கள் முறையே அரசியல் விவகாரங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

இந்த நியமனங்கள் தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் இதை ‘அரசு நிர்வாகத்தில் தனிநபர் தலையீடு’ என விமர்சிக்கின்றன. முதல்வர் இவர்களின் அதிகாரப்பூர்வ பதவிகள், அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களின் அடிப்படை மற்றும் அதிகார வரம்புகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வில்சன் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக அரசின் நிர்வாக வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் அலுவலகத்தின் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version