அதிகாரிகளை தேர்வு செய்ய, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வகுத்த பார்முலாவை முதலமைச்சர் விஜய் கையில் எடுத்துள்ளாராம்.
ஒரு அரசின் வெற்றி அல்லது தோல்வி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தலைமையைப் பொறுத்தது என்றாலும், அரசு எந்திரத்தைச் சீராக இயக்கும் பொறுப்பு அதிகாரிகளிடமே அதிகம் உள்ளது. கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதிலும், மக்களுக்கான திட்டங்களை களத்துக்கு கொண்டு செல்வதிலும் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானது.
சினிமாவில் 68 படங்களில் நடித்து ‘தளபதி’ என்ற அடைமொழியுடன் புகழ் பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆதரவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது பலரும் சந்தேகம் எழுப்பினர். அரசியல் அனுபவமே இல்லாத ஒரு சினிமா நடிகர் இந்தப் பெரிய ஆட்சிக் கப்பலைச் சவால்களுக்கு மத்தியில் செலுத்த முடியுமா என்பதே அந்தக் கேள்வி. ஆனால், அவர் பொறுப்பேற்ற பிறகு காட்டிய செயல்பாடு எதிர்பார்ப்புகளை மீறியதாக அமைந்துள்ளது.
முதலமைச்சர் விஜய், நல்ல ஆட்சிக்கு நல்ல அதிகாரிகள் அவசியம் என்பதை உணர்ந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வகுத்த முறையைப் பின்பற்றினார். எம்.ஜி.ஆரின் செயலாளராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி குறிப்பிட்டபடி, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை நான்கு வகைகளாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்ற பொறுப்புகளை வழங்கியதே எம்.ஜி.ஆர். ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.
நேர்மையும் திறமையும் உள்ளவர்கள்
திறமையானவர்கள் ஆனால் நேர்மையற்றவர்கள்
நேர்மையானவர்கள் ஆனால் திறமையற்றவர்கள்
இரண்டும் இல்லாதவர்கள்
இந்தப் பிரிவினையின் அடிப்படையில் விஜய் தற்போது அதிகாரிகளை நியமித்து வருகிறார். கடந்த ஆட்சியில் யார் எந்தப் பதவியில் இருந்தார்கள் என்பதைப் பார்க்காமல், ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற தகுதியுள்ள அதிகாரிகளைத் தேர்வு செய்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 56 போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். நேர்மையும் திறமையும் கொண்ட அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அதிகாரிகள் தங்களது பணியை உத்வேகத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக மக்களுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. விஜய் சிறந்த தொடக்கத்தை வழங்கியுள்ளார். இந்த நல்ல போக்கு தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
