புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி, தமிழ் திரைப்படத் துறையினர் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘C’ படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாகப் பெறத் தேவையில்லை எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவு சினிமாத் துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்தவர் என்பதால் சினிமாத்துறையினரின் கஷ்ட நஷ்டங்களை அறிந்த முதலமைச்சர், தங்களுக்கு இதுபோல் இன்னும் நல்லவைகளைத் தொடர்வார் என்று கோலிவுட் வட்டாரம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
