சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் 78.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது
சென்னையில் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்து சேவையைப் பயன்படுத்தி வரும் நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் நாள் தோறும் 3 ஆயிரத்து 600 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அதிகரித்து வரும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஏ.சி. வசதி கொண்ட பஸ் நிறுத்தங்கள் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. அந்த வகையில், சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம், துறைமுகம் ஆகிய 4 இடங்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஏ.சி.வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.78.40 லட்சம் மதிப்பீட்டில் இந்த பஸ் நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள், செல்போன் சார்ஜிங் பாயிண்ட், கழிப்பறை, டிஜிட்டல் தகவல் பலகைகள், குடிநீர், கண்காணிப்பு கேமரா, வை-பை போன்ற வசதிகள் இடம்பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, இப்பகுதியில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையமானது நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்களை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
