இந்தியாவில் வீதிக்கு ஒரு சிக்னல் இருந்தாலும் கூட விபத்துகளை தவிர்க்க முடிந்த பாடில்லை. 7 கண்டங்களை கொண்ட பூமியில், மொத்தம் 195 நாடுகள் உள்ளன. உலக மக்கள் தொகையான 830 கோடியில் அதிகபட்சமாக இந்தியாவில் 147 கோடி பேர் வசிக்கின்றனர். 141 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இங்கு மொத்தம் 40 கோடி வாகனங்கள் இருக்கின்றன. தினந்தோறும் விபத்துகளும், சாலை விதி மீறல்களும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட போதிய சாலை வசதிகள் இல்லாததும் ஒரு காரணமே. அப்படியிருக்க, இந்தியாவின் பக்கத்து நாட்டில் சிக்னலே இல்லை என்றால் நம்ப முடிகிறதா?
இந்தியாவிற்கு மிக நெருக்கத்தில் உள்ளது பூட்டான். உலகிலேயே மிகச்சிறிய நாடுகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிற்கு மேல் நேபாளத்திற்கு அருகே அமைந்துள்ள இந்திய நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 லட்சம் தான். தலைநகர் திம்புவில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர்தான் வசிக்கின்றனர். பூட்டானில் உள்ள எந்த சாலையிலும் போக்குவரத்து சிக்னல்கள் என்பதே இல்லை. அதே நேரத்தில், வாகனங்களும் தங்குதடையில்லாமல் எளிதாக சாலைகளில் பயணிக்கின்றன.
அதன் தலைநகர் திம்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கைகளால் காட்டும் சைகைகள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். தலைநகர் திம்புவில் 1990-ம் ஆண்டு போக்குவரத்து சிக்னல்களை அமைத்தபோதும் அதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த காரணத்தால், அவை நீக்கப்பட்டு மீண்டும் கைமுறை சைகைகள் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.
பூட்டானில் ஒவ்வொரு சாலைகளும், சாலை சந்திப்புக்களை கொண்ட வட்டச் சாலைகளும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கையாகவே மலைப்பாங்கான நாடு என்பதால், வாகனங்கள் மெதுவாகவே செல்கின்றன. மேலும், வாகன ஓட்டிகளும் அவசரம் காட்டாமல், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றனர்.
பாதசாரிகள் கடக்கும் இடங்களில், மெதுவாகவே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பாதசாரிகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தேவையில்லாமல் ஹாரன் ஒலிக்கப்படுவதும் இல்லை.
இப்படி, போக்குவரத்து ஒழுங்காக நடைபெறும்போது, பூட்டானில் எதற்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் தேவை? என்ற கேள்வி எழுகிறது. எனவேதான், பூட்டானில் சிக்னலும் இல்லை, அதனால் சிக்கலும் இல்லை.
