புதுக்கோட்டை அருகே கட்டுமாவடி தொடங்கி அரசங்கரை வரை தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மும்பை தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கும், கடல் வழி ஊடுருவல்களை முறியடிப்பதற்கும் இந்திய கடலோரக் காவல் படையும், தமிழ்நாடு கடலோரக் காவல் குழுமமும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையைத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட கட்டுமாவடி தொடங்கி அரசங்கரை வரை உள்ள சுமார் 42 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் இந்த வருடத்திற்கான ‘சாகர்காவாச்’ (Sagar Kavach) மெகா ஒத்திகை இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், கடல் வழியாகச் சட்டவிரோத சக்திகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைய முயன்றால் அதனை எப்படித் தடுத்து அழிப்பது என்பது குறித்துத் தீவிரமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்புப் பணியில் இரண்டு டி.எஸ்.பி-க்கள் மற்றும் பல ஆய்வாளர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடலோரப் பகுதிகள் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version