திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், “எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் எங்கள் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமிக்கு சொந்தமான தங்க நகைகளை தங்கள் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் ஏதாவது கஷ்டம் என்று கேட்டால் அந்த நகைகளை கொடுத்து உதவுவது வழக்கம்.
சில மாதங்களில் நகைகளை வாங்கிய நபர்கள் அதற்கு மேலாக கோவிலுக்கு என தங்களால் முடிந்த பண உதவிகளை செய்வதும் உண்டு. அதுபோல கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் நாட்டார் பொறுப்பில் இருந்த 510 கிராம் கோவில் நகைகளை அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார், செல்வி, வெங்கடேசன், தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி கோவிலுக்கு சொந்தமான நகைகள் வேண்டும் எனவும் மூன்று மாதங்களில் திருப்பித் தருகிறேன் என்று கூறி ஊரார் முன்னிலையில் வாங்கி சென்றார்.
ஆனால் தற்போது 18 மாதங்கள் ஆகியும் நகைகளை தராமல் மோசடியில் ஈடுபட்டு ஸ்ரீதர் நாட்டாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து ஊர் பொதுமக்கள் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது குறித்து ஸ்ரீதர் நாட்டார் கோவிலுக்கு சொந்தமான நகைகளை திரும்ப கொடு என கேட்கும் பொழுது இவர் மீது பொய்யான புகார் சரவணன் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமான 510 கிராம் தற்போதைய மதிப்பில் 76 லட்சம் ரூபாய் வர இருக்கும். எனவே கோவில் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
