எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரை பேரம் எனவும் எம்எல்ஏக்கள் சுயமாக வேறு கட்சிக்கு செல்வது குதிரைப் பந்தயம் எனவும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு, இது தவெக- அதிமுக அவர்கள் கட்சிக்குள் நடைபெறும் விஷயம். ஏதாவது தவறு நடந்தால் அப்பொழுது நாங்கள் பேசுவோம் எனவும் இப்பொழுது தவெக – அதிமுக இடையே நடைபெறுவது குறித்து நாங்கள் பேசுவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக எம்.பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு எந்த அடிப்படையில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது? என பதில்கேள்வி எழுப்பிய பிரவீன் சக்கரவர்த்தி, எம்.எல்.ஏக்கள் சொந்தமாக சுயமாக முடிவெடுத்து வேற கட்சிக்கு செல்கின்றனர் என்றார்.
குதிரைப் பேரம் தொடர்பான கேள்விக்கு, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் , தவெக எம்எல்ஏ வை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு போட சொல்லியதாக வழக்கு போட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி, பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரை பேரம் , அதுதான் ஹார்ஸ் டிரேடிங். எம்.எல்.ஏகள் சுயமாக வேறு கட்சிக்கு போகின்றனர் ,இது ஹார்ஸ் ரேசிங் எனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த 50 நாட்களில், யாரைக் கேட்டாலும் ஊழல் குறைந்திருப்பதாகவும், அரசு அலுவலகங்களில் வேலை விரைவாக நடப்பதாக சாதாரண மக்கள் பேசுவதாகவும் கூறியவர், இது பெரிய புரட்சி எனக்கூறினார்.
சிங்கப் பெண் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அமல்படுத்தவே நேரம் ஆகும் எனவும், 5 ஆண்டுகளில் நடந்ததை 50 நாட்களில் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றார்.
தவெக வாசிங் மெசின் என கனிமொழி எக்ஸ் பதிவு குறித்த கேள்விக்கு , அவர் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும், 2026 மக்கள் தீர்ப்பு மாற்றம் வேண்டும் , திமுக எதிர்க்கட்சியில் உட்கார வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார்.
ஏன் திமுக பயப்படுகிறது? எதிர்க்கட்சியில் அமர என்ன பயம்? எதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என பயம்?, திமுக அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி ஏன் ஆட்சியைப் பிடிக்க பதற்றப்படுகின்றனர் என தெரிவித்தார்.
கல்லா பெட்டி கூட்டணி என காங்கிரஸை விஜய் கிண்டல் செய்ததைக் குறிப்பிட்டு, இப்போது கல்லாப்பெட்டி தவெக வசம் சென்றது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் ஆதரவு கொடுத்து இருக்கிறது, நேற்றைய தினம் தேநீர் பார்ட்டியில் கூட்டணி கட்சியினருக்கு மரியாதையும், மதிப்பும் கொடுத்தனர், 60 ஆண்டு காலத்தில் இதெல்லாம் நடந்தது கிடையாது எனவும், இந்த 50 நாட்களில் சிறப்பான துவக்கம் நடந்துள்ளது எனவும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்..
