திண்டிவனத்தில் அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேள்வி கேட்டதால்தான் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கியதாகவும், இன்றைய அதிமுகவில் கேள்வி கேட்பவர்களை வெளியேற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்டதால் அதிமுக இன்று மிகப்பெரிய இழப்பை சந்தித்திருப்பதாகவும், இத்தனை தோல்விக்கும் என்ன காரணம் என தொண்டர்கள் உணர்ந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமி உணரவில்லை எனவும் கூறினார்.
தீய சக்தி திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட அதிமுக, இன்று அதே திமுகவோடு கூட்டணி போட்டு முதலமைச்சராக வேண்டும் என நினைத்தபோதே அதிமுகவின் சுயத்தை இழந்து விட்டது.
எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நாடகம் போடுகிறார்.
இன்று கொத்துக் கொத்தாக அதிமுகவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சீட்டு கட்டு போல இந்த இயக்கம் சரிகிறது. ஆனால் இன்னும் எடப்பாடி பழனிசாமி தனது தவறை உணரவில்லை.
இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் 31-இல் வெற்றி பெற்றோம் என்றால் அது பாமக போட்ட பிச்சை. கூட்டணியில் பாமக இல்லையென்றால் வடமாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்காது.
பாமக இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியே தட்டுத் தடுமாறிதான் ஜெயித்திருப்பார்.
அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கூறிவருகிறேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிமுக செயற்குழுவையாவது எடப்பாடி பழனிசாமி கூட்டவேண்டும். ஆண்டுக்கு 2 முறை கூட்டவேண்டிய கூட்டத்தை கூட்டாமல் உள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக எடப்பாடியின் பேச்சைக் கேட்ட பாவத்திற்குத்தான் தற்போது அன்பவித்து வருகிறோம்.
அதிமுக காப்பாற்றப்படவேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
