அரசு நிர்வாகங்களில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்தை பாதுகாப்பாக செயல்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) செயல் திட்டங்களின் விவரங்கள் என்ன? அவற்றில் ஒப்புதல் அளிக்கப்பட்டவை, நிராகரிக்கப்பட்டவை மற்றும் தற்போது பரிசீலனையில் உள்ளவை எத்தனை? அவற்றை மதிப்பீடு செய்வதற்காக பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் என்ன?
- ஆட்சி நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை வழங்கலுக்கான AI செயல் திட்டங்களை உருவாக்கும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியுள்ளதா? அவ்வாறாயின் அதன் விவரங்கள் என்ன?
- AI-அடிப்படையிலான நிர்வாகத் தீர்வுகளைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதா, அவ்வாறு திட்டமிட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் என்ன?
- அரசின் நிர்வாகங்களில் AI-யை பயன்படுத்தும்போது, குறிப்பாக குடிமக்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கும் அமைப்புகளில், வெளிப்படைத்தன்மை பொறுப்புணர்வு தரவுத் தனியுரிமை மற்றும் சுயாதீன தணிக்கை ஆகிய தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
- AI தொழில்நுட்பத்தை மாநிலங்களுக்கிடையே சமநிலையுடன் பரவலாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், தொழில்நுட்பத்தில் முன்னேறிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு AI உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் திறன்மிக்க மனிதவள மேம்பாட்டிற்கான சமமான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்யவும் மாநில ரீதியான ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்கும் வகையில் அரசு ஏதேனும் கொள்கை திட்டம் வகுத்துள்ளதா?
