போராட்டக்காரர்களை கலைக்க மெட்டாலிக் பெலட் (Metallic Pellet) துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, காவல்துறை விதிமுறைகளையே நேரடியாக சவால் செய்யும் வகையில் திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் உளவுத்துறை (IB) சிறப்பு இயக்குநர் யசோவர்தன் ஆசாத் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற ‘சன்சத் சலோ’ மாணவர் போராட்டத்தில் காயமடைந்த இருவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர், அமைதியான மாணவர் போராட்டத்தின் மீது ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் (RAF) மெட்டாலிக் பெலட் குண்டுகளை பயன்படுத்தியதாகவும், இரு மனுதாரர்களின் உடலில் இருந்து அந்த பெலட்டுகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பெலட்டுகள் அல்ல, மெட்டாலிக் பெலட்டுகள்தான் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சில விசேஷ சூழல்களில் காவல்துறை விதிமுறைகள் பெலட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதிப்பதாகக் குறிப்பிட்டனர். அந்த விதிமுறைகளை சவால் செய்யாமல் முழுமையான தடை கோருவது தெளிவற்ற கோரிக்கையாக இருப்பதாகவும், மனுவை அதற்கேற்ப திருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

அதேவேளையில், மாணவர்களின் அமைதியான போராட்டங்களுக்கு வன்முறையால் பதிலளிக்கக் கூடாது என்றும், சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைக்கு ஏற்ப அளவான (Graded Response) நடவடிக்கைகளே காவல்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும், ஜூலை 20 போராட்டத்தில் காயமடைந்த மனுதாரர்கள் மற்றும் இதேபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை டெல்லி அரசு வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. போராட்ட நாளில் ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிமருந்து பதிவேடுகள் மற்றும் பணிப்பதிவுகளை பாதுகாத்து வைக்குமாறும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version