மேற்கு வங்கம்–வடக்கு ஒடிசா கடற்கரையை இன்று பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலின் வடமேற்குப் பகுதியில், மேற்கு வங்கம்–வட ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு சுமார் 3 கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இது மேற்கு வங்கத்தின் சாகர் தீவிற்கு தெற்கே 30 கி.மீ., திகாவிற்கு கிழக்கு–தென்கிழக்கே 70 கி.மீ., டயமண்ட் ஹார்பருக்கு தெற்கே 90 கி.மீ., கேனிங்கிற்கு தெற்கு–தென்மேற்கே 110 கி.மீ. மற்றும் ஒடிசாவின் பாலசோருக்கு கிழக்கு–தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு இன்று பிற்பகலில் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாலசோர் மற்றும் மேற்கு வங்கத்தின் கேனிங் இடையே கடற்கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் தாக்கத்தால் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். மேலும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
