டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியின் போது நிகழ்ந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேர் கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும், அதில் 101 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் டெல்லி காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பு டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கியது. சுமார் 20 நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த இப்போராட்டம், கடந்த ஜூலை 20 அன்று வன்முறையாக மாறியது.

நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுமாறு CJP விடுத்த அறிவிப்பையடுத்து, ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

வன்முறையில் ஈடுபட்ட 2,873 பேரிடம் டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கைது செய்யப்பட்ட மற்றும் விசாரிக்கப்பட்ட நபர்களில் 989 பேருக்கு கொடூரமான குற்றங்களில் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 101 பேர் மீது ஏற்கெனவே கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

62 பேர் கொலை முயற்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். 284 பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள். 229 பேர் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குகளில் சிக்கியவர்கள். 19 பேர் மீது ஆட்கடத்தல் வழக்குகளும், 6 பேர் மீது போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளன. குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் மீது கைது மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version