மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கடுமையான சொற்களால் விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர் ஊழலின் அடையாளமாகவும் நாட்டின் சீரழிந்த கல்வி முறைக்குக் காரணமானவராகவும் திகழ்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கல்வி முறையின் சீர்கேடுகள்தான் 26 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்ததோடு, லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி அவர்களைப் போராடத் தள்ளியதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது தார்மீக அடிப்படையில் அல்லாமல், கொதித்தெழுந்த இளைஞர்களின் கடும் எதிர்ப்புக்குப் பயந்தே அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சாடியுள்ளார்.

இதற்கிடையே, தவறிழைத்ததாகக் கூறப்படும் அதே நபருக்கு நாடாளுமன்றத்தில் பாஜக தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் விமர்சித்துள்ளார். இது மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டதைக் கொண்டாடும் செயல் எனவும், நாட்டின் ஒவ்வொரு மாணவரும் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு, இதற்குத் துணைபோன அனைவரையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version