தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அதேப் போல தமிழ் இயக்குநர்களில் மிகவும் தனித்துவமான இயக்குநர் என்றால் அது மிஷ்கின். இவரது படங்கள் அனைத்தும் மக்களின் மனதை வருடம் விதமாக இருக்கும்.
அப்படியான மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ’டிரெயின்’ திரைப்படம். இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நாசர், மற்றும் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், டீசரை படக்குழு சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், மிஷ்கினின் திறமையையும், அவரது நேர்மையான பேச்சையும் மேடையிலேயே மனதாரப் பாராட்டினார். இயக்குநர் மிஷ்கினை, டி. ராஜேந்தருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தன்னிச்சையாகவும், எதற்கும் அஞ்சாமலும் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பேசும் ஒரு ‘தனித்துவமான பேச்சாளர்’ என்று இயக்குநர் அமீர் பாராட்டியுள்ளார்.
விழாவில் மிஷ்கின் பேசும்போது, “ நீண்ட நாளுக்குப் பிறகு தாணு சாரை சந்தித்து படம் பண்ணலாம் என்றேன். விஜய் சேதுபதியை வைத்துப் பண்ணலாம் என்றார். விஜய் சேதுபதி என்னுடன் ஒரு படத்தில் 2 நாட்கள் நடித்தார். பிறகு 10 வருடத்துக்குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்கவில்லை. பிறகு அவர் பெரிய நடிகராக வளர்ந்து விட்டார். என்னுடைய ‘சைக்கோ’ படம் பாத்துவிட்டு என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன்.
இந்தக் கதையை விஜய் சேதுபதிக்காகப் பார்த்துப் பார்த்து எழுதினேன். கதையில், வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்துக் கொண்டிருக்கிற கதாபாத்திரம் அவருக்கு. இந்தப் படத்தை விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடியாது. கமல் சார் கூட பண்ணியிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவரவில்லை. படம் நன்றாக இருந்தால்தான் ஓடும் என்பது தெரியும். விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் மறக்கவே முடியாது” என்றார்.
