தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.  ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஊழல் விவகாரங்களில் சமரசம் செய்யப்போவதில்லை என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் முழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து, திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை நடத்தியது. தற்போது மேலும் ஏழு முக்கிய திமுக தலைவர்களைக் குறிவைத்து விசாரணை வளையம் விரிவடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவரது பேரன் இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உயர்கல்வி பயின்று வருவதால், அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவே ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விழா முடிந்ததும், சுமார் பத்து நாட்கள் அங்கேயே ஓய்வெடுத்துவிட்டு, ஜூலை 20-ஆம் தேதிக்குப் பிறகு அவர் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, லண்டன் பயணத்திற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த மு.க. ஸ்டாலினுக்கு, அங்கு திரண்டிருந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தனது பயணத்திற்கு முன்னதாகத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் காட்டும் அன்பு எனக்குப் புதிய ஊக்கத்தைத் தருகிறது. நான் இரண்டு வாரங்கள் வெளிநாடு சென்றாலும், எனது மனம் எப்போதும் அறிவாலயத்திலேயே இருக்கும்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். துபாய் வழியாக லண்டன் சென்றுள்ள ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணம், தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே முக்கியமாகக் கருதப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version