கண்ணியமிக்க காயிதே மில்லத் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷமிட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இரண்டு நாட்களுக்கு முன்புதான் செல்வப்பெருந்தகை கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களை மதிப்பதே தமிழர் பண்பாடு என்று கூறியுள்ளார்.

காயிதே மில்லத் நினைவிடத்தில்கூட கண்ணியத்தை கடைப்பிடிக்க முடியாத நிலை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குழுவிற்கு உருவாகியுள்ளது வருத்தமளிப்பதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இந்த நிகழ்வு திமுகவின் புதிய அரசியல் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும், உதயநிதியைச் சுற்றியுள்ள குழுவினர் எதிர்க்கட்சிகளை மதிக்காமல் தேவையற்ற மோதல்களை உருவாக்குவதாகவும் அவர் சாடியுள்ளார்.

மேலும், பாஜக மற்றும் அதிமுகவுடன் உதயநிதிக்கு மறைமுக புரிந்துணர்வு இருப்பதாக எழுந்துள்ள அரசியல் கேள்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய செயல்பாடுகள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதும் கண்ணியத்துடனும் ஜனநாயக மரபுகளுடனும் பயணிப்பார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version