தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுகவினர் உடனடியாகக் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தக் கைதை “உச்சகட்ட அடக்குமுறை” என வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதாகத் தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிகாலையிலேயே அவரது இல்லத்துக்கு சென்று கைது செய்தனர். கைதுக்குப் பிறகு அவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டியிலும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தமிழக அரசுக்கு எதிராக” கோஷங்கள் எழுப்பிய அவர்கள், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தினர். போராட்டத்தின் போது போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் தலையிட்டு 60க்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இந்த நடவடிக்கையை கடுமையாகச் சாடினார். “ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக மக்கள் பிரதிநிதியை மதிக்காமல் காலை 6 மணிக்கு வீட்டுக்கு போலீசை அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் எஸ்.பி. அலுவலகத்தில் அடைத்து வைப்பது உச்சகட்ட அடக்குமுறை” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், அதே மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட தவெக எம்.எல்.ஏ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதையும் உதயநிதி சுட்டிக்காட்டினார். “எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமை” என்று வலியுறுத்தினார்.
“பேசினாலே கைது என்ற அராஜகத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணவத்தில் எத்தனை கைதுகள் செய்தாலும் கழக உடன்பிறப்புகள் அஞ்ச மாட்டோம். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவைச் சந்திப்பது உறுதி” என உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சியினரின் குரலை நசுக்கும் முயற்சியா அல்லது சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது.
