கிருஷ்ணகிரியில் கணினி மையத்தில் நுழைந்த திமுக நகராட்சி கவுன்சிலர், அந்த கடையின் உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சீனிவாசன். இவர் எல்ஐசி அலுவலகம் எதிரே உள்ள அவ்வை நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அந்த பகுதியில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை கொட்டி வைத்து, சிமெண்ட் சாலை பணிகளையும் செய்து முடித்துள்ளார். இந்த நிலையில் மீதம் இருந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் அந்தப் பகுதியிலேயே இருந்துள்ளது. பின்னர் அவரிடம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் என அந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை எடுத்துச் சென்று அவரவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு பள்ளமாக இருந்த பகுதிகளில் கொட்டி தாங்களாகவே சமன் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அந்தப் பகுதிக்கு வந்த திமுக கவுன்சிலர் சீனிவாசன் குறிப்பிட்ட அந்த கணினி மையத்திற்கு சென்று அவர் அங்கிருந்த உரிமையாளர் ஹரி பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாரைக் கேட்டு எம் சாண்ட் மற்றும் ஜல்லிகளை பயன்படுத்தினாய் எனக் கேட்டதுடன் ஆத்திரமடைந்து ஆபாசமாக பேசி அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து ஹரி பிரகாஷ் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவரது தந்தையும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார் அவரையும் சீனிவாசனின் ஆதரவாளர்கள் கட்டையால் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
