தவெக அரசு, பாஜக பயன்படுத்தும் அதே அரசியல் யுக்திகளைப் பின்பற்றி திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகளைத் தொடர்வதாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலர் பரந்தாமன் கடுமையாகக் குற்றம் சாட்டினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், தூத்துக்குடி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை “குதிரை பேரம்” அம்பலமாக்கும் சதியாக விமர்சித்தார்.

“அவதூறு வழக்கில் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணனை 6 மணி நேரத்துக்கு மேல் விசாரித்தது ஏன்? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையுமாறு அவரை வற்புறுத்தும் முயற்சியே இது” என்று பரந்தாமன் கூறினார். மேலும், நீதிமன்றம் தவெக அரசின் முயற்சியை மறுத்து மூக்கு அறுத்துள்ளதாகவும், தினந்தோறும் திமுக மீது பழி சுமத்தும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்த பின்னணி: கடந்த மாதம் 20-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யை ஒருமையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தவெக நகரச் செயலாளர் செல்வகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் அவருக்கு எதிராக பிரிவு 352 மற்றும் 353(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவின்போது, போலீஸ் தரப்பில் “அமைச்சராக இருந்தவர் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். முன்ஜாமீன் அளித்தால் மோதல் ஏற்படும்” என வாதிக்கப்பட்டது. அனிதா பேசிய விவரங்கள் எழுத்துப் பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

நீதிபதி, “1967க்குப் பிறகு தமிழ்நாட்டில் சினிமா பின்னணியில் இருந்தவர்களே ஆட்சி செய்கின்றனர். மக்கள் தேர்ந்தெடுத்தவர்கள் அவர்கள். எம்.எல்.ஏ.வாக இருந்தும் முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லையா?” எனக் கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். திமுகவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட அவர், ஜூடீசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் விசாரணைக்குப் பிறகு ரூ.10,000 சொந்த ஜாமினில் அவரை விடுவித்தார். மேலும் 10 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பில் இதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறும் நிலையில், தவெக தரப்பில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி வருகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version