விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு, தேர்தலுக்குப் பின்னர் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும்,

சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும் எனச் சாடியுள்ளார்.

மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படாத நிலையில் இருப்பதாக விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின்,  தவெக அரசைப் பொறுத்தவரையில், எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருப்பதாக கூறியிருக்கிறார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதலமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் அமைதி காத்து வருவதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின்,

மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருர் உதயநிதி ஸ்டாலின்  தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version