சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் இம்முறை திமுக கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், தலைமையிடமும் தொகுதி மக்களிடமும் நல்ல பெயர் எடுத்து வெற்றி வாய்ப்பு 50%-த்திற்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே ‘சீட்’ என்பதில் உறுதியாக உள்ளதாம் திமுக தலைமை. எந்தெந்த காரணிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, வருகின்ற சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெரும் முனைப்போடு தகுதியான வேட்பாளர்களை மட்டுமே களமிறக்க திட்டமிட்டுள்ள திமுக, அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ள உடன்பிறப்புகள் யார்? யார்? என்ற விவரத்தை சேகரித்துள்ளதாம். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவு செய்தவர்கள், நிதியை செலவிடாமல் அலட்சியம் காட்டிய சட்டமன்ற உறுப்பினர் லிஸ்டையும் கூடவே எடுத்து வைத்துள்ளது திமுக தலைமை.

தத்தமது தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடையே சம்பாதித்து வைத்துள்ள அதிருப்திகளும் அது தொடர்பான கருத்துக்களும் கூட பரிசீலிக்கப்படுகின்றன. அந்த வகையில் உள்ளூர் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், தொண்டர்களிடமும் நல்ல பெயர் வாங்காமல் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் பட்டியலும் தயாராகியுள்ளது. சட்டசபை வருகை பதிவு, தொகுதி பிரச்சனைக்கான கேள்வி கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை, தங்களது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியது போன்ற காரணிகளின் அடிப்படியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். இது வழக்கமான நடைமுறை என்றாலும் கூட முன்பு இருந்த தளர்வுகள் கூட இந்த முறை நிச்சயம் இருக்காது என்கிறது அறிவாலய வட்டார தரப்பு தகவல்.

தற்போது பதவியிலிருக்கும் எம்.எல்.ஏ., க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து ஆளுங்கட்சியின் ‘சர்வே’ நிறுவனம் மேலிடத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதில் “தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் 60 பேரின் வெற்றி வாய்ப்பு 50%-த்திற்கும் கீழ் இருப்பதாகவும் அவர்களுக்கு சீட் கொடுப்பது ஆபத்தானது” என்றும் கூறப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சில மூத்த நிர்வாகிகள், “பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 60 பேர் பட்டியலில் உள்ளனர். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது. கட்டப்பஞ்சாயத்து, சொத்து குவிப்பு, மணல் கடத்தல், சட்டவிரோத குவாரி தொழில் போன்ற குற்றசாட்டுகளுக்கு ஆளாகியவர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க வாய்ப்பு குறைவு. ‘இந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தொகுதியில் வெற்றி வாய்ப்பு இழுபறி’ என சர்வேயில் கூறப்பட்டுள்ள உறுப்பினர்களில் சில பேர் அமைச்சராகவோ அல்லது மாவட்டச் செயலாளராகவோ இருந்தாலும் கூட அவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம். அதற்கு மாற்றாக புதுமுகங்களுக்கும், இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக” கிசுகிசுக்கின்றனர்.

ஆக, மேற்கூறப்பட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டே வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான காரணிகளாக சொல்லப்பட்ட எதிர்மறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், “நீங்கள் சொல்லித்தானே செய்தோம்; உங்களுக்காகவும் தானே செய்தோம். இப்போது அதையே காரணமாக வைத்து ‘சீட்’ தரமாட்டோம் என்றால் அது எப்படி நியாயம். எங்களுக்கு சீட் வேண்டும்” என உள்ளுக்குள் போர்க்கொடி தூக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version