தமிழ்நாடு அரசியல் களம் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.

3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில், சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர், இம்முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும், கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்தாண்டு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். ஆனால் திமுக சார்பில் முதலமைச்சர் வரை ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில் விஜய்யின் தவெகவிடம் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், விஜய்யை சந்தித்தது உண்மை தான் எனவும் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையோ அப்படி ஒன்றும் நடக்கவில்லை. திமுக உடன் தான் கூட்டணியில் இருப்போம் என கூறினார்.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் தரப்பில் இருந்து குறைந்தது 25 தொகுதிகளையும், அதிகபட்சமாக 35 தொகுதிகளையும் ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக சார்பில் கடந்தமுறை கொடுத்த அதே 25 தொகுதி உட்பட 1 மாநிலங்களை பதவியும் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தால் உடனடியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும், இல்லை எனில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version