திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேசியதற்கு, “திமுகவின் ஒவ்வோர் ஊழலாக வெளிவரும்போது, உங்கள் அழுக்கு மூட்டைகள் அவிழுமே. அப்போது என்ன செய்வீர்கள்? தானாகவே வந்து சிக்கலில் சிக்கப் போகிறது திமுக. அன்றும் திமுகவைப் பார்த்து நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது” என தவெக தகவல் தொழில்நுட்ப அணி பதில் கொடுத்துள்ளது.
இது குறித்து தவெக தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பக்கத்தில், “தீயசக்தி திமுகவின் முன்னாள் அமைச்சர், பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் புளுகுமூட்டை சிவசங்கர், இன்று நம் முதலமைச்சரின் பேச்சால் மனம் பதறி, பதற்றத்தில் மனநிலை தவறி, உளறி இருக்கிறார். யோகிபாபுவின் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பேற்றுள்ளது போன்று பேசி இருக்கிறார்.
கரூரில் பேசும்போது, திமுக ஆட்சியில் காவல் துறையைக் கையாண்ட விதத்தையே நம் வெற்றித் தலைவர் சுட்டிக் காட்டினார். இன்றைக்கு இருக்கும் காவல் துறை, யாருடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது சிவசங்கர்? அது தெரியாமல் உளறலாமா நீங்கள்? இன்றைக்குப் பாதுகாப்பு எவ்வளவு தெளிவாக இருந்தது என்பது, கரூர் மக்களுக்குத் தெரியும். அன்றைக்குப் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆனால், எப்போதும் உண்மையை மூடி மறைப்பதுதானே தி.மு.க.வின் மனநிலை?
ஊழலின் ஊற்றுக்கண், திமுக. ஊழல் கடலில் தினந்தோறும் நீச்சல் அடிக்கும் திமுகவினருக்கு, செந்தில் பாலாஜி என்ற புனிதருக்குப் பாதபூஜை நடத்துவது கூச்சமாக இருக்க வாய்ப்பே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைத் தீயசக்தி திமுகவில் சேர்த்துவிட்டு, இன்று உங்கள் வாயையே வாஷிங் மெஷினாக்கி, துப்புக்கெட்ட தனமாக மென்று துவைப்பதால் உங்கள் கட்சியின் அழுக்கு நீங்கிவிடுமா சிவசங்கர்?
அறிஞர் அண்ணா சொன்ன அகப்பையில் எண்ணெய்க் கதையை ஏதோ உங்கள் சிந்தனை போல உளறுவதுதான் உங்கள் அறிவு நேர்மையா சிவசங்கர்? பிறர் அறிவைத் திருடுவதிலும் ஊழல் செய்வதுதான் திமுகவின் உண்மை குணம் என்பது வெளிப்பட்டுவிட்டதே. திமுகவின் ஒவ்வோர் ஊழலாக வெளிவரும்போது, உங்கள் அழுக்கு மூட்டைகள் அவிழுமே. அப்போது என்ன செய்வீர்கள்? தானாகவே வந்து சிக்கலில் சிக்கப் போகிறது திமுக. அன்றும் திமுகவைப் பார்த்து நாடே கைகொட்டிச் சிரிக்கப் போகிறது” எனத் தெரிவித்துள்ளது.
