அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தத் தடை விதித்து இந்திய கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA) உத்தரவிட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் இந்திய அரசு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்கு மோதலில், இதுவரை 13 இந்தியர்கள் வளைகுடா பிராந்தியத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மறு உத்தரவு வரும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலிலும் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்தக் கூடாது என கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நிறுவனங்களுக்குக் உத்தரவிடப்பட்டுள்ளது.

வணிகக் கப்பல்கள் மீதான அபாயம் அதிகரித்துள்ளதால், மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடல்சார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், கடல்சார் பாதுகாப்பு எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கப்பல் கேப்டன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு அவசர கால உதவிக்கும் இந்திய மாலுமிகள் உடனடியாக ‘இந்திய கடல்சார் தகவல் தொடர்பு மையம்’ அல்லது ‘இந்திய கடற்படையின் தகவல் ஒருங்கிணைப்பு மையத்தை’ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஈரானின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், வளைகுடா பிராந்தியத்தில் போரைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலடியாக, ஈரானும் தனது துறைமுகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அமெரிக்காவுடனான தங்களின் போர் தவிர்க்க முடியாதது என எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் எரிசக்தி ஏற்றுமதி மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version