நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு நடிகையும் தொழிலதிபருமான ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து காக்ரோச் ஜனதா கட்சி  தலைமையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகையும் தொழிலதிபருமான ப்ரீத்தி ஜிந்தா மாணவர்களுக்கு தனது  ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள  பதிவில், மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்துவது மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், மாணவர்களின் அமைதியான போராட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசவிரோத சக்திகளால் திசைதிருப்பப்படாமல் இருப்பதும் முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இணையதளங்களில் பரவி வரும் வெறுப்பும் பிளவுகளும் கவலையளிப்பதாக குறிப்பிட்ட அவர், “மாணவர்கள் உணரும் கோபத்தையும் விரக்தியையும் ஆயுதமாக பயன்படுத்துவதற்காக நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தீய சக்திகள் கூடுதல் நேரம் வேலை செய்யத் தொடங்கியிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பு, சமத்துவம் மற்றும் திறமை ஆகியவற்றில் தனக்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதாக கூறிய ப்ரீத்தி ஜிந்தா, நாட்டின் ஜனநாயகம், சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசின் செயல்பாடுகள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், அரசு சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் உடனடியாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“இந்தியாவின் எதிர்காலத்திற்காக போராடும் மாணவர்களுக்கும் சோனம் வாங்சுக்கிற்கும் எனது முழு ஆதரவு உண்டு. கல்வி முறையை மேம்படுத்தும் இந்தப் போராட்டத்தில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version