அண்மைக்காலமாக உள்நாட்டுப் போட்டிகளில் அதிரடியாக விளையாடி கவனம் ஈர்த்து வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, இப்போதே அவசரப்பட்டு இந்திய அணியில் சேர்க்க வேண்டாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். திறமையான இளம் வீரர்களை மிக விரைவாக சர்வதேச அரங்கிற்குள் கொண்டு வருவது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தேர்வுக்குழுவினர் இதில் நிதானம் காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே இந்திய அணியில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடி வரும் வீரர்களின் இடத்தை பறிப்பது முறையல்ல என்றும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், தற்போது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து நிலையான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், இவர்களை நீக்கிவிட்டு சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பது ஆரோக்கியமான முடிவாக இருக்காது என்று தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், மிக இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டின் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளாகும் வீரர்கள், ஆரம்பத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் தங்களது தன்னம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். அவ்வாறு அவசரப்பட்டு அணியில் சேர்த்துவிட்டு, பின்னர் அவர் ஒரு மோசமான காலகட்டத்தை எதிர்கொண்டால், இந்திய அணி நிர்வாகம் மீண்டும் மற்றொரு வீரரைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். எனவே, அஜித் அகர்கர் தலைமையிலான இந்தியத் தேர்வுக்குழு இந்த விஷயத்தில் மிகவும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.
