ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் பெயரைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் என்பவருக்கு முன்னாள் அமைச்சருடன் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சிவசங்கரின் நேர்முக உதவியாளர் எனக் கூறிக்கொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன், சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. சீனிவாசன் என்பவரை அணுகினார். தனது மகனுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) பணி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து, 2023 முதல் 2025 வரை படிப்படியாக ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் வாக்குறுதிப்படி வேலை கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல், பணத்தைத் திருப்பிக் கேட்ட சீனிவாசனை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சீனிவாசன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து இளஞ்செழியனை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடமிருந்து இரண்டு தமிழ்நாடு அரசு அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்றில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் என்றும், மற்றொன்றில் நுங்கம்பாக்கம் மாவட்டக் கல்வி அதிகாரி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அட்டைகள் உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்ற மோசடியில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இளஞ்செழியன் தனது தாயை சிவசங்கரின் ஆசிரியை என்றும், முன்னாள் அமைச்சருடன் பலமுறை தொலைபேசியில் பேசியதே தனக்கு நம்பிக்கை அளித்ததாகவும் புகாரில் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், தலைமைச் செயலகத்தில் சிவசங்கரை நேரில் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். “கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது” என சிவசங்கர் இளஞ்செழியனுக்கு உறுதி அளித்ததாகவும் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இளஞ்செழியன் யார் என்றே தனக்குத் தெரியாது, அவரைத் தனது உதவியாளராக நியமித்ததில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் எனக் கேள்வி எழுப்பியிருந்த சிவசங்கரின் பெயர் இப்போது மோசடி வழக்கில் சிக்கியுள்ளது திமுகவுக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தின் முழு உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version