அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், 6-வதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் தொடங்கிய நாள் முதல் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபிரியா, இசக்கி சுப்பையா, ஆகிய 4  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைந்துள்ளனர். டாக்டர் விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் தவெகவில் இணையவில்லை.

இந்த நிலையில், அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இதனை மெய்ப்பிப்பதுபோல் அவர் காலை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தார்.

பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரன் அறைக்கு சென்றவர் சபாநாயகர் வரத் தாமதமானதால் அங்கு காத்திருந்தார். அவரை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவி விலகலுக்கான கடிதத்தை வழங்க உள்ளார்.

இதையடுத்து வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் இணைவார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-வது MLA-வாக தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

தவெக பொது செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவியை ராஜினாமா செய்தால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 41 ஆக குறையும்.

மேலும், திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயரவுள்ளது. இதனால் மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version