விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், அரசு அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அங்குள்ள ஒரு தகர செட்டில் வழக்கம்போல் அதிக சப்தம் எழுப்பும் காகித வெடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், குடோன் உரிமையாளர் ராம்பிரகாஷ் (32), பாண்டிதுறை (35), இன்னாசிமுத்து (42), அவரது சகோதரர் ஐயப்பராஜா (38 ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குடோன் உரிமையாளரின் அண்ணன் ராமச்சந்திரன் (40) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் இந்த கோர விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் இருவர் சகோதரர்கள் என்பதால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
