திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடுரில் சிறுமியின் உடலை அரசு மருத்துவமனை மாற்றி வழங்கியதையடுத்து, புதைக்கப்பட்ட உடல் தோண்டி  எடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏடுர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சுமன் – காயத்ரி தம்பதியின் 17 வயது அனுஷ்கா மகள் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு, எளாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சனிக்கிழமை  இரவு  சிகிச்சை பலனின்ரி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், காவல்துறையினரின் உதவியுடன் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை உடலை வாங்க வந்தனர். ஆனால் மருத்துவமனை தரப்பில் சிறுமியின் உடல் எனக் கூறி வேறு ஒரு பெண்ணின் உடலை வழங்கியுள்ளனர்.

இதனை உறவினர்கள் கண்டறிந்த நிலையில் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அந்த சடலம் சென்னை மணலி பகுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் எனவும்,  மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால், மணலி பெண்ணின் உறவினர்களிடம் அனுஷ்காவின் சடலத்தை வழங்கியதும் தெரியவந்தது.

மேலும், அதேபோல் அனுஷ்காவின் உடல் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு மணலி பகுதியில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்த அனுஷ்காவின் உறவினர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மணலி பகுதியில் புதைக்கப்பட்ட அனுஷ்காவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் மருத்துவமனை கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அனுஷ்காவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்த நிலையில் அங்குள்ள போலீசார் சமரசம் செய்து அனுஷ்காவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version