விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், விவசாயிகளின் பயிர்க் கடன்களை எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

பயிர் சாகுபடிக்காக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஏராளமான விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், இதனால் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதோடு, விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நிறைவடைந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version