வரலாற்றில் முதன்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில், காலிறுதிக்கு நார்வே அணி முன்னேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வெய்ன் ரூனியிடம் தனது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நகைச்சுவையாக நினைவூட்டினார்.
பிரேசிலை நார்வே வீழ்த்தினால், “மெர்சி ஆற்றில் படகோட்டிச் செல்வேன்” என்று வெய்ன் ரூனி முன்பு வேடிக்கையாக கூறியிருந்தார். இதை நினைவுபடுத்திய ஹாலண்ட், தனது யூடியூப் வ்லாக்கில், “வெய்ன் ரூனி, நீங்கள் படகோட்டச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று சிரித்தபடி கூறினார்.
நியூ ஜெர்சியில் நடைபெற்ற 16-வது சுற்று ஆட்டத்தில், ஐந்து முறை உலகச் சாம்பியனான பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் நார்வே அதிரடியாக வீழ்த்தியது. அந்தப் போட்டியில் நார்வே அணிக்காக இரு கோல்களையும் ஹாலண்ட் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நார்வே காலிறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டிக்குப் பிறகு பேசிய ஹாலண்ட், பிரேசில் கால்பந்துக்கு தனது மரியாதையையும் வெளிப்படுத்தினார்.
“பிரேசில் என்பது கால்பந்தின் அடையாளம். அந்த அணியின் ஜெர்சி, அந்த நாட்டின் கால்பந்து கலாச்சாரம், ரசிகர்களின் ஆர்வம் அனைத்தும் எனக்கு எப்போதும் வியப்பை அளித்துள்ளன. நெய்மர் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் விளையாடிய நாட்டுக்கு எதிராக களமிறங்குவது கூட ஒரு கனவு போலத்தான் இருந்தது. பிரேசில் கால்பந்து அணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது” என்றார்.
மேலும், பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோவையும் அவர் பாராட்டினார்.
“ரொனால்டோ ஒரு தனித்துவமான வீரர். ‘எல் ஃபெனோமேனோ’ என்று அழைக்கப்படும் அவர், கால்பந்து விளையாடத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்வேகம். அவர் டிரிபிளிங் செய்த விதமும், விளையாட்டை ரசித்த விதமும் மறக்க முடியாதவை” என்று ஹாலண்ட் கூறினார்.
இந்த வெற்றி ஹாலண்ட் குடும்பத்திற்கும் சிறப்புமிக்க ஒன்றாக அமைந்தது. ஹாலண்டின் தந்தை ஆல்ஃபி ஹாலண்ட், 1998 உலகக் கோப்பையில் பிரேசிலை வீழ்த்திய நார்வே அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த முறை 16-வது சுற்று ஆட்டத்திற்கு முன், ரொனால்டோ நசாரியோ மற்றும் கஃபு உள்ளிட்ட பிரேசில் ஜாம்பவான்களை சந்தித்ததும் ஹாலண்டின் வ்லாக்கில் இடம்பெற்றிருந்தது.
இந்த வெற்றியைப் பற்றி ஹாலண்ட் கூறுகையில், “பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு செல்வோம் என்று நான் கூட நினைத்ததில்லை. இது நம்ப முடியாத சாதனை. 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெற்றியை எதிர்பார்க்கும் அணிக்கு எதிராக விளையாடுவது எளிதல்ல. அந்த அழுத்தம் பிரேசில் அணியிடம் இருந்தது. நாங்கள் எங்களது ஆட்டத்தை மட்டும் ரசித்து விளையாடினோம்” என்றார்.
போட்டிக்கு முன்பு அணியினரிடம் கூறிய அறிவுரையையும் அவர் பகிர்ந்தார்.
“என்ன நடந்தாலும் புன்னகையுடன் விளையாடுங்கள்; இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம் என்று நான் கூறினேன்” என்றார்.
கால்பந்தில் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வாழ வேண்டும் என்பதே தனது வாழ்க்கை தத்துவம் என்றும் ஹாலண்ட் தெரிவித்தார்.
தற்போது உலகக் கோப்பை தொடரில் 7 கோல்கள் அடித்துள்ள ஹாலண்ட், அதிக கோல்கள் அடித்த வீரருக்கான ‘கோல்டன் பூட்’ விருதுக்கான போட்டியிலும் முன்னிலையில் உள்ளார். நார்வே அணி, ஜூலை 12-ஆம் தேதி நடைபெறும் காலிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
