பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் 32-வது சுற்றிலேயே ஜெர்மனி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜுலியன் நாகல்ஸ்மேன் “ஜெர்மனி இனி உலக கால்பந்தின் முதல் தர அணிகளில் ஒன்றாக இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, பராகுவே அணியுடனான மோதலில், பராகுவேவிடம் தோல்வியைத் தழுவி, தொடரிலிருந்து வெளியேறியது. இந்த முடிவு உலகக் கோப்பையின் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
போட்டிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் நாகல்ஸ்மேன், “முதல் சுற்றிலேயே வெளியேறுவது ஜெர்மன் கால்பந்துக்கு போதுமானது அல்ல. தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பையிலும் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியுள்ளோம். எனவே, இனி முதல் தர அணிகளில் நாங்கள் இல்லை. இந்த முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது,” என்று தெரிவித்தார்.
மேலும், ஜெர்மன் புட்பால் பெடரேஷன் (DFB) நிர்வாகம் தன்னை நம்பினால், பயிற்சியாளராக தொடர்ந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜெர்மனியில் தற்போது தனது செயல்பாடு குறித்து மக்கள் நேர்மறையாக பேச மாட்டார்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், விமர்சனங்களால் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பை 2026 தொடரில் ஜெர்மனி மிக விரைவாக வெளியேறிய அணிகளில் ஒன்றாக மாறியது. மறுபுறம், பராகுவே அணி மறக்க முடியாத வெற்றியுடன் 16-வது சுற்றுக்கு முன்னேறியது.
உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த ஜெர்மனி, 41-வது இடத்தில் இருந்த பராகுவேவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றில் தரவரிசை வித்தியாசத்தின் அடிப்படையில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி தோல்விகளில் இதுவும் ஒன்றாக பதிவாகியுள்ளது.
