மின்சார நுகர்வோர்களின் மீட்டர் படிப்பு பணியை எளிதாக்கி, டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. மின்சார கணக்கீட்டாளர்களுக்கு புதிய செல்போன் வாங்குவதற்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஊழியர்கள் தங்கள் மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி துல்லியமான மீட்டர் வாசிப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த மின் இணைப்புகள் 2.40 கோடிக்கும் அதிகமாக உள்ளன. வீட்டு இணைப்புகள், கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. மாநில அரசு வீட்டு நுகர்வோருக்கு மாதம் 200 யூனிட்டுக்கு உட்பட்ட இலவச மின்சாரம், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கு முழு இலவச மின்சாரம் ஆகிய சலுகைகளை வழங்கி வருகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதால் முறைகேடுகள் கணிசமாகக் குறைந்துள்ளன. தற்போது இரு மாதங்களுக்கு ஒருமுறை (60 நாட்களுக்கு ஒருமுறை) மீட்டர் படிப்பு நடைபெற்று, அதனடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் டிஜிட்டல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, மொபைல் செயலி மூலம் மீட்டர் படிப்பு மேற்கொள்ள ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கப்படுகிறது.
ரூ.10,000 உதவி மற்றும் சிறப்பு சிம்: இத்திட்டத்தின்படி, மின்சார கணக்கீட்டாளர்கள் புதிய செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்குவதற்காக ரூ.10,000 நிதியுதவி பெறலாம். மேலும், தங்குதடையற்ற இணையம் மற்றும் அழைப்பு வசதிக்காக சிறப்பு போஸ்ட் பெய்ட் CUG (Closed User Group) சிம் கார்டுகளும் வழங்கப்படும். இந்த நிதியுதவி ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். ஒரு ஊழியர் இத்தொகையைப் பெற்ற பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் இந்தச் சலுகையைப் பெற முடியும்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 7,500 மின்சார கணக்கீட்டாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பணியை நவீனப்படுத்தி, துல்லியமான மற்றும் வேகமான கணக்கீட்டை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நவீன காலத்தில் மின் பகிர்மானப் பணிகளில் செயலிகள் முக்கியப் பங்கு வகிப்பதால், இத்திட்டம் ஊழியர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியானது மின் நுகர்வோருக்கு துல்லியமான பில்கள் வழங்குவதோடு, மின்வாரியத்தின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். டிஜிட்டல் இந்தியா இலக்கை நோக்கி தமிழ்நாடு மின் துறை மேலும் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
