இந்தியாவின் முன்னாள் சமஸ்தானங்களின் மகாராஜாக்கள், தங்களின் பிரம்மாண்டமான அரண்மனைகளுக்காகவும், அரிய வகை கார்களுக்காகவும், வேட்டைப் பயணங்களுக்காகவும் அறியப்பட்டவர்கள். ஆனால், அவர்களது அந்த ‘ஷாக்’ (Shauk – ஆர்வம்) இந்திய கால்பந்து விளையாட்டின் வளர்ச்சியில் எத்தகைய முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது பலரும் அறியாத வரலாறு. 2026 பிஃபா (FIFA) உலகக்கோப்பை நடைபெற்று வரும் வேளையில், இந்திய கால்பந்தின் ராஜ வேர்களைத் திரும்பிப் பார்ப்பது காலத்தின் கட்டாயம்.
இந்தியாவின் மூத்த ஆண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான ‘சந்தோஷ் கோப்பை’, அன்றைய வங்காளத்தின் (தற்போதைய வங்கதேசம்) சந்தோஷ் மன்னர் சர் மன்மதா நாத் ராய் சவுத்ரி (Sir Manmatha Nath Roy Chowdhury) பெயரால் அழைக்கப்படுகிறது. 1941-ல் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இன்றுவரை இந்திய கால்பந்தின் மிக முக்கியமான தொடராகத் திகழ்கிறது. இவர் புகழ்பெற்ற ‘ஈஸ்ட் பெங்கால்’ கால்பந்து கிளப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் என்பதோடு, இந்திய கால்பந்து சங்கத்தின் (IFA) தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
வங்காளத்தின் கூச் பெஹார் சமஸ்தானம், கால்பந்து கலாச்சாரத்தின் மையமாகத் திகழ்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட கால்பந்து, அப்போதைய மன்னர் நிருபேந்திர நாராயண் பூப் பகதூரின் முயற்சியால் மக்களைச் சென்றடைந்தது. பிரிட்டிஷ் கல்வியால் ஈர்க்கப்பட்ட அவர், தனது கல்கத்தா அரண்மனை மைதானத்தை இந்திய மற்றும் பிரிட்டிஷ் அணிகள் மோதும் களமாக மாற்றினார். 1893-ல் அவர் தொடங்கிய ‘கூச் பெஹார் கோப்பை’ கால்பந்து தொடர், மோகன் பகான் போன்ற கிளப்புகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
மன்னர் நிருபேந்திர நாராயணனைத் தொடர்ந்து, அந்தச் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ஜெகதீபேந்திர நாராயணும் கால்பந்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவர் 1939-ல் ‘கூச் பெஹார் கால்பந்து சங்கக் கோப்பை’ என்ற தொடரைத் தொடங்கி, தனது அரண்மனை மைதானத்திலேயே போட்டிகளை நடத்தினார். இந்திய கால்பந்து சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தியதில் இவரது பங்கு அளப்பரியது.
இந்தியா இன்று கால்பந்து உலக அரங்கில் கவனம் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த காலத்தில் மகாராஜாக்கள் விதைத்த அந்த அடித்தளமே இன்றும் விளையாட்டின் ஊற்றாக உள்ளது. வெறும் அரசர்கள் மட்டுமல்லாமல், விளையாட்டுப் புரட்சியாளர்களாகத் திகழ்ந்த இந்த மகாராஜாக்கள், இந்திய கால்பந்து வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளனர்.
