நடிகை கௌதமியின் சொத்துகளை மோசடி செய்த வழக்கில் கைதான அழகப்பன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.

 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு  மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌதமி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் தனது  சொத்துக்களை நிர்வகிக்க பொது அதிகாரம் கொடுத்திருந்தார். அதைத் தவறாக பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், உள்ளிட்ட சிலர் ஒன்று சேர்ந்து சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை கௌதமி குற்றம் சாட்டியிருந்தார்‌.

பின்னர் நடிகை கௌதமி தனது சொத்துகள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உட்பட பல்வேறு மாவட்ட காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள 46 ஏக்கர் நிலத்தை விற்க அழகப்பனிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால்  அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சொத்துக்களை அபகரித்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்..

2016-17 வருமான வரி மதிப்பீட்டில், 8.61 ஏக்கர் நிலத்தை விற்று கிடைத்த  11.17 கோடி ரூபாயில், அழகப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகள் 4.10 கோடி ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு, மீதியை மோசடி செய்து விட்டதாகவும் இதனால், 2.61 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி வருமானவரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் அதனை தொடர்ந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கௌதமி குற்றம் சாட்டியிருந்தார்‌.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 65.31 லட்ச ரூபாய் செலுத்திய பிறகு நடிகை கௌதமி வங்கி கணக்குகளை மீட்டார். இதேபோன்று 2016ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில், அழகப்பன் மூலமாக  72.42 ஏக்கர் நிலம் தொடர்பாகவும் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு சொத்துக்களை அபகரித்து விற்பனை செய்த விவகாரம்  தொடர்பாக கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில்  அழகப்பன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஏழு வழக்குகளில் ஏமாற்றப்பட்ட சொத்தின் மூலம் கிடைத்த பணத்தினை அழகப்பன், அவரது மனைவி, வாரிசுகள், உறவினர்கள் உள்ளிட்ட பலர், வருமான வரி மற்றும் சட்டங்களை ஏமாற்றி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அழகப்பன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய  25 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்தும் பல்வேறு சொத்துக்களை மோசடி செய்து விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் வருமான வரி ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்களை அடிப்படையாக வைத்து நடிகை கௌதமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

குறிப்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் தமிழக காவல் துறையில் போடப்பட்டுள்ள வழக்குகளை அடிப்படையாக வைத்து மட்டுமே அமலாக்கத்துறை பொதுவாக வழக்கு பதிவு செய்யும். ஆனால் நடிகை கௌதமியை பொறுத்த வரையில் 7 வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். குறிப்பாக அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக நடிகை கௌதமியிடம் சாட்சியங்கள் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சம்மன் அனுப்பி அவரிடம் ஒன்பது மணி நேரம்  அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.   

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு இடங்களில்  சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மோசடியில் ஈடுபட்ட அழகப்பன் தொடர்பான இடங்களிலும் சோதனை என்பது நடைபெற்று வருகிறது.

மதுரையில் அழகப்பன் வீடு மற்றும் தொடர்பான இடங்களிலும் சென்னை அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின் முடிவில் நடிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்து சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாகவும் வெளிநாட்டில் எவ்வளவு சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version